ஜார்க்கண்ட் - பாஜக எம்.எல்.ஏக்கள் கூண்டோடு விலகல்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் உள்ள 21 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடனடியாக சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி இந்த விலகலை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.
இன்று சபாநாயகர் ஆலம்கீர் ஆலமை சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அவர்கள் வழங்கினர்.
இவர்கள் தவிர கடந்த பாஜக கூட்டணி ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினரும் கூட ராஜினாமா செய்து விட்டார்.
கடந்த 2005ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் சில உறுப்பினர்களின் ராஜினாமா, தகுதி நீக்கம், இடைத் தேர்தல் தோல்வி காரணமாக அது 21 ஆக குறைந்தது.
தற்போது பாஜக உறுப்பினர்களின் விலகல் காரணமாக சட்டசபை உறுப்பினர்களின் மொத்த பலம் 42 ஆக குறைந்து விட்டது.
கடந்த ஜனவரி 19ம் தேதி ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து சிபு சோரன் விலகியதைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தமார் சட்டசபை இடைத் தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து சோரன் பதவி விலக நேரிட்டது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications