முத்தூட் கொலை-நெல்லையில் சரணடைந்தோர் கேரள போலீஸாரிடம் ஒப்படைப்பு
நெல்லை: முத்தூட் அதிபர் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரையும் கேரள போலீஸார் இன்று நீதிமன்றத்தின் அனுமதியுன் கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.
முத்தூட் நிதி நிறுவன அதிபர் மகன் பால் ஜார்ஜ் கடந்த மாதம் 22ம் தேதி ஆழப்புழை-சங்கனாச்சேரி பிரதான சாலையில் காரில் சென்றபோது மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் தொடர்புடைய 12 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவான திருவனந்தபுரம் ஓகே நிவாஸ் பகுதியை சேர்ந்த ரவுடி ஓம்பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளி புத்தன்பாலம் ராஜேஷ் ஆகியோரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஓம்பிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் நேற்று காலை நெல்லை குற்றவியல் 4ம் எண் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை வரும் 11ம் தேதி வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்து அதன்பிறகு திருவனந்தபுரம் வாஞ்சியூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த தகவலை கேள்விப்பட்ட திருவனந்தபுரம் துணை போலீஸ் கமிஷனர் ஜோலி செரியான், டிஎஸ்பி முகமது ஷாபி ஆகியோர் திருநெல்வேலி விரைந்தனர். அவர்கள் நெல்லை டிஐஜி கண்ணப்பன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
ஆனால் அதற்குள் கைதிகள் இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் போலீஸ் அதிகாரிகள் ஏமாற்றுத்துடன் திருவனந்தபுரம் திரும்பினர்.
இந்நிலையில் திருவனந்தபுரம் வஞ்சியூர் போலீசார் நெல்லையில் சரணடைந்த ஓம்பிரகாஷ், ராஜேஷ் ஆகியோரை திருவனந்தபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி திருவனந்தபுரம் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி சுஜாதா விசாரித்து இவர்கள் 2 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஓப்படைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டை ஜெயில் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை நெல்லை வந்த கேரள போலீஸ் குழு, 4வது ஜேஎம் கோர்ட் நீதிபதியிடம் கேரள கோர்ட்டின் உத்தரவைக் காட்டினர். இதையடுத்து இரு கைதிகளையும் கேரளாவுக்கு அழைத்துச் செல்ல நெல்லை நீதிபதி அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சிறைக்கு விரைந்த கேரள போலீஸ், குழு ஓம்பிரகாஷ் மற்றும் ராஜேஷை பலத்த பாதுகாப்புடன் திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications