ராசிபுரம்-விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரண்ட்
ராசிபுரம்: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ராசிபுரம் இன்ஸ்பெக்டருக்கு சார்பு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் சின்னம்மாள் (57). இவர் கடந்த 2002 ல் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது, அந்த வழியாக வந்த பைக் சின்னம்மாள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் சின்னம்மாள் படுகாயமடைந்தார். இதனால், தனக்கு இழப்பீடு கோரி சின்னம்மாள் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் போலீசார் உரிய காலத்தில் சரியான முறையில் விசாரணை செய்யவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியனை சின்னம்மாள் தரப்பு சாட்சியாக சேர்த்தது.
அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி சார்பு நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். ஆனால், ஒரு மாதம் ஆன நிலையிலும் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியனை ஆஜராகும்படி சார்பு நீதிபதி குணசேகரன் வாரண்ட் பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications