தூத்துக்குடி அருகே கடலில் மீனவர்கள் பயங்கர மோதல்
நெல்லை: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் இரண்டு பிரிவுகலை சேர்ந்த மீணவர்கள் கடுமையாக மோதி கொண்டனர். இந்த மோதலில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வலைகள் சேதமடைந்தன.
நெல்லை மாவட்டம் உவரி அருகேயுள்ள இடிந்தகரை கிராம மீனவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மீன்பிடிப்பது தொடர்பாக மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் இடிந்தகரை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலில் வலை விரித்திருந்தனர். அப்போது எந்திர படகில் அந்த பக்கம் வந்த தருவைகுளம் மீனவர்கள் அங்கு விரிக்கப்பட்டிருநத ரூ. 2 லட்சம் மதிப்பிலான வலையை சேதப்படுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த இடிந்தகரை மீனவர்கள் வாக்குவாதம் செய்தனர். இருதரப்பினருக்கும் நடுக்கடலில் மோதல் வெடித்தது. அப்போது தருவைகுளத்தை சேர்ந்த 41 பேரை இடிந்தகரை மீனவர்கள் சிறைபிடித்து கரைக்கு அழைத்து வந்தனர்.
தகவல் அறிந்த உவரி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். சேதமடைந்த வலைக்கு நஷ்டஈடு கொடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.