பாரதிராஜா அலுவலக தாக்குதல்- வைகோ மீது அவதூறு வழக்கு
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலே காரணம் என்று கூறியது முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், நகர அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில், அரசியல் பொறாமை மற்றும் துவேஷம் காரணமாக இவ்வாறு முதல்வரை இணைத்து பேசியுள்ளார் வைகோ.
மேலும்,முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், அவருக்கு இழிவு வந்து சேர வேண்டும் என்ற நோக்கிலும் இவ்வாறு தவறான முறையில் பேசியுள்ளார்.
சம்பந்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக முறையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரிந்தும் கூட இவ்வாறு அவர் பேசியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.