For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளக்காதலைத் தொடர வலியுறுத்திய பிரியாணிக் கடை உரிமையாளர் அடித்துக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

Sheeba
சென்னை: இளம் பெண்ணுடன் இருந்த கள்ளக் காதலை மறக்க முடியாமல், அவருக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்த நபரை, அப்பெண்ணின் கணவர் உள்ளிட்டோர் படுகொலை செய்தனர்.

இதுகுறித்த விவரம்...

கோயம்பேட்டை சேர்ந்தவர் முகமது பஷீர். மலேசிய தொழில் அதிபரான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

சூளைமேடு, கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் தலப்பா கட்டு பிரியாணி பாஸ்ட்புட் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல பிரியாணி நிறுவனம்தான் தலப்பா கட்டு பிரியாணி கடை. ஆனால் அந்தப் பெயரில் தற்போது போலியாக பல கடைகள் உலா வருகின்றன. அப்படிப்பட்ட கடைகளில் ஒன்றுதான் பஷீர் நடத்திய தலப்பா கட்டு பிரியாணி கடை.

இவரது மகன் முகமது ஹக்கீம் (25). இவர்தான் பிரியாணி கடைகளை பார்த்து வந்தார். சூளைமேட்டுக் கடையில்தான் எப்போதும் இருப்பார்.

அதே பகுதியில் லேடீஸ் ஹாஸ்டல் நடத்தி வருபவர் ஷீபா. இவருக்கும் 25 வயதுதான். அடிக்கடி ஹக்கீம் கடைக்குச் சென்று பிரியாணி சாப்பிடுவாராம் ஷீபா. இதனால் அவருக்கும், ஹக்கீமுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஷீபா ஏற்கனவே கல்யாணமானவர். அவரது பெயர் ராபின். மனைவியுடன் சேர்ந்து லேடீஸ் ஹாஸ்டலை இவரும் நிர்வகித்து வந்தார்.

ராபினுக்குத் தெரியாமல் ஷீபாவும், ஹக்கீமும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். ராபின் ஊரில் இருந்தாலும் கூட எப்படியாவது ஷீபாவும், ஹக்கீமும் சந்தித்து உல்லாசமாக இருந்து விடுவார்களாம்.

இந்த நிலையில் ஷீபா விவகாரம் ராபினுக்குத் தெரிய வந்துள்ளது. அவர் மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனாலும் ஷீபா தனது கள்ளக்காதலை விடுவதாக இல்லை.

இதையடுத்து மிகுந்த சிரமப்பட்டு ஷீபாவை தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தார் ராபின். அதன் பின்னர் ஹக்கீமை சந்திக்காமல் இருந்து வந்தார் ஷீபா.

இருந்தாலும் ஹக்கீமுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஷீபாவை செல்போனில் தொடர்பு கொண்டு அழைப்பாராம். ஆனால், எல்லாம் முடிந்து விட்டது. இனியும் தொடர வேண்டாம், விட்டு விடுவோம் என்று கூறியுள்ளார் ஷீபா.

இருந்தாலும் விடாமல் தொடர்ந்து ஹக்கீம் செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்துள்ளார். இதையடுத்து தனது கணவரிடம் கூறியுள்ளார் ஷீபா.

இதைத் தொடர்ந்து தனது நண்பர்களான ரவி, ராஜசேகர், கார் டிரைவர் சத்யா ஆகியோரை வரவழைத்து ஹக்கீமை தனியாக அழைத்து அடித்து உதைப்பது என முடிவு செய்தனர்.

அதன்படி ஷீபாவை விட்டு இரவு 11.30 மணிக்கு அண்ணா நகர் ரவுண்டானாவில் நிற்பதாகவும், வந்தால் ஜாலியாக இருக்கலாம் எனவும் கூற வைத்துள்ளார் ராபின்.

இதையடுத்து சூளைமேடு கடையில் அண்ணா நகர் போவதாக கூறி விட்டுக் கிளம்பினார் ஹக்கீம். அங்கு கார் ஒன்றுக்கு அருகே நின்று கொண்டிருந்தார் ஷீபா.

அவரிடம் நெருங்கிய ஹக்கீமிடம், காருக்குள் ஏறுமாறு கூறியுள்ளார் ஷீபா. இதையடுத்து காருக்குள் ஏறினார் ஹக்கீம். ஆனால் உள்ளே ராபின் உள்ளிட்டோர் இருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

ஹக்கீமை சூளைமேட்டுக்குக் கொண்டு சென்ற ராபின் மற்றும் கும்பல் அங்கிருந்த ஒரு வீட்டில் வைத்து ஹக்கீமை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் ஹக்கீம் உயிரிழந்து போனார்.

வெறுமனே அடிக்க மட்டுமே திட்டமிட்டிருந்த அந்தக் கும்பல், ஹக்கீம் இறந்து போனதால் அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து ஹக்கீமின் உடலை எடுத்துக் கொண்டு அரக்கோணம் சென்ற அவர்கள் அங்கு ரயில்வே டிராக்கில் உடலைப் போட்டு விட்டு வந்தனர்.

இந்த நிலையில், மகனைக் காணாமல் தவித்த தந்தை பஷீர் பல இடங்களில் தேடிப் பார்த்தார். பின்னர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார், ஹக்கீமின் செல்போன் எண்ணை ஆராய்ந்தபோது, அவருடன் கடைசியாக ஷீபா பேசியது தெரிய வந்தது.

இதையடுத்து ஷீபாவிடம் விசாரித்தபோது அவர் உண்மையைக் கக்கி விட்டார். இதையடுத்து ஷீபாவை நேற்றும், அவரது கணவர் ராபின் மற்றும் கார் டிரைவர் சத்யாவை இன்றும் போலீஸார் கைது செய்தனர்.

தலைமறைவான ரவியும், ராஜசேகரும் தற்போது பொள்ளாச்சியில் பதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸார் பொள்ளாச்சி விரைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X