து.முதல்வர், அமைச்சர், காங். பதவி- ஜெகன் மோகனுக்கு காங். வாய்ப்பு
ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து அவரது இடத்தில் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டியை நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர்.
ஆனால் மிகவும் சிறு வயதாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் பதவியைத் தர காங். மேலிடம் விரும்பவில்லை. ஆந்திர மாநில மூத்த காங். தலைவர்களும் அதை விரும்பவில்லை.
இந்த நிலையில், ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பரும், ஜெகன் மோகன் கோஷ்டியின் தலைவர் போல செயல்பட்டு வருபவருமான கே.வி.பி. ராமச்சந்திர ராவை டெல்லிக்கு அழைத்தது கட்சி மேலிடம்.
முதல்வர் பதவியை ஜெகன் மோகன் ரெட்டி எதிர்பார்க்க வேண்டாம். துணை முதல்வர் பதவி, மத்திய அமைச்சர் பதவி, மாநில கட்சியில் பதவி ஆகிய ஏதாவது ஒன்றை அவர் தேர்வு செய்யலாம் என்று அப்போது ராவிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று ஹைதராபாத் திரும்புகிறார் ராவ். அப்போது ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து டெல்லியில் ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளை (இன்று) ஹைதராபாத்தில் அனைத்துக் கட்சி இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ளப் போகிறேன். சனிக்கிழமை மீண்டும் டெல்லி திரும்புவேன் என்றார்.
இதற்கிடையே, ஜெகன் கோஷ்டியைச் சேர்ந்த 11 எம்.பிக்கள் நேற்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினர். அப்போது ஜெகன் மோகனை முதல்வராக்க வேண்டும் என்று பிரணாபிடம் வலியுறுத்தினர்.