ஸ்வைன்: மேலும் 9 பேர் பலி- இந்தியாவில் 154
டெல்லி: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிராவில் 5, கர்நாடகாவில் 4 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து இந்தியாவில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் அகமத்நகர், சதாரா, ராய்காட் மற்றும் சோலப்பூரை சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர். அவர்களது பெயர்கள் உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து மகாராஷ்டிராவில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் பெங்களூர், பிஜப்பூர், பாஹல்கோட், தாவங்கரே நகரை சேர்ந்த தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். இங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் சுமார் 176 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகபட்சமாக 68 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 32, மகாராஷ்டிராவில் 26, தமிழகத்தில் 19 மற்றும் ஹரியானாவில் 14 பேருக்கு பரவியுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,611 ஆக அதிகரித்துள்ளது.