டெல்லி பள்ளி நெரிசல் சாவுகள்: ஈவ்-டீசிங் காரணம்!
டெல்லி: டெல்லி அரசுப் பள்ளியில் 7 மாணவிகளி்ன் உயிர் பலியாகக் காரணம் மாணவர்களின் ஈவ்-டீசிங் தான் என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக கஜூரிகான்ஸ் பகுதியில் உள்ள பள்ளிக் கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டு சுவர்களில் ஷாக் அடிப்பதாக கிளம்பிய வதந்தியையடுத்து மாணவிகள் அலறியடித்து வெளியேறியதில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 7 மாணவிகள் பலியானதாகக் கூறப்பட்டது.
ஆனால், இந்த நெரிசலுக்கு ஈவ்-டீசிங் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. காலையில் மாணவிகளுக்கும், பிற் பகல் முதல் மாணவர்களுக்கும் என இரண்டு ஷிப்டுகளாக இந்தப் பள்ளி இயங்குகிறது.
நேற்று பள்ளியில் தேர்வு நடந்ததால் மாணவர்கள், மாணவிகள் அனைவரும் காலை ஷிப்டிலேயே பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.
ஆனால், கடும் மழையால் பள்ளியின் கீழ் தளத்தில் தண்ணீர் நுழைந்துவிட்டதால் மாணவர்களை முதல் மாடிக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர்.
அப்போது தேர்வை முடித்துவிட்டு மாணவிகள் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். இந் நிலையில் மாடிக்கு ஏறிய மாணவர்கள் சிலர் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகத் தெரிகிறது.
அப்போது மாணவிகள் தப்பியோடுகையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதில் தான் சம்பவ இடத்திலேயே 5 மாணவிகள் நெரிசலில் மிதிபட்டு பலியாயினர். 30க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் இரு மாணவிகள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்தப் பள்ளியில் ஈவ்-டீசிங் வழக்கமானது என்றும், அதைக் கட்டுப்படுத்த நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாணவிகளின் பெற்றோர் புகார் கூறுகின்றனர்.
மேலும் 2 மாடிகளே கொண்ட இந்த சிறிய பள்ளியில் 2,000 மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். இதனால் வழக்கமாகவே இங்கு கூட்ட நெரிசலும் அதிகம்.
இந் நிலையில் மாணவிகளை ஈவ்- டீசிங் செய்த மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications