உறுப்பினர் சேர்ப்பில் ஈடுபட்ட காங். பிரமுகரை உதைத்த திமுக நிர்வாகி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கும் பிரச்சனையில் காங்கிரஸ் பிரமுகருக்கு அடி உதை விழுந்தது. இது தொடர்பாக திமுக செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுக்க பல லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
இதனால், தூத்துக்குடி தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஆறுமுகநேரி பகுதியில் அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கரநாராயணன் (36) இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இவர் திமுக உறுப்பினர்களை அதிக அளவில் காங்கிரஸில் சேர்த்ததாக கூறி ஆறுமுகநேரி நகர திமுக செயலாளர் சுரேஷ், மற்றும் எலிசா, சிவலிங்கம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடித்து உதைத்தனர்.
இதில், படுகாயமடைந்த சங்கரநாராயணன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சங்கரநாராயணை தாக்கிய, சுரேஷ், எலிசா, சிவலிங்கம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யப்படவில்லை. அவர்கள் ஆளும் கட்சியினர் என்பதால் கைது செய்யவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.