திருச்சி அருகே பஸ்-சுமோ மோதல்: 4 பேர் பலி
திருச்சி: திருச்சி அருகே இன்று காலை அரசு பேருந்து ஒன்று டாடா சுமோ மீது மோதியதில், சுமோவில் வந்த 4 பேர் பலியானார்கள்.
செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வந்தவர் பாபு (37). இவருக்கு பாக்கியலட்சுமி (25) என்ற மனைவியும், 4 வயதான நவீன்குமார் என்ற மகனும் இருந்தனர்.
நேற்று பாபு, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருணாநல்லூரை சேர்ந்த பாலமுருகன் என்ற டிரைவருடன் டாடா சுமோ காரில் மதுரைக்கு கிளம்பினார். அவருடன் மனைவியும், மகனும் பயணம் செய்தனர்.
கார் இன்று காலை திருச்சி அருகே சமயபுரம் பகுதியில் 4 வழிச்சாலையில் தெற்கு நோக்கி செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு சொகுசு பேருந்து ஒன்று சரியான பாதையில் செல்லாமல், தவறுதலாக சுமோ வந்த ஒரு வழிப்பாதையில் வந்துள்ளது.
இதை சற்றும் எதிர்பாராத சுமோ டிரைவர் வண்டியை வேகமாக திருப்ப முயன்றார். ஆனால், அதற்குள் அந்த அரசு பேருந்து சுமோ மீதி மோதி அதை உருக்குலைய செய்துவிட்டது. சுமோவின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது.
இந்த சம்பவத்தில் சிறுவன் நவீன் குமாரை தவிர்த்து சுமோவில் வந்த மற்ற மூவரும் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள். சிறுவன் நவீன் குமார் திருச்சி மருத்துவமனையின் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தான்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சொகுசு பஸ் டிரைவர் சங்கரை கைத செய்தனர்.












Click it and Unblock the Notifications