புதுச்சேரி அரசு மேப்பில் காஷ்மீர் இல்லை - இந்து முன்னணி கண்டனம்
புதுச்சேரி: புதுச்சேரியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச நோட்டு புத்தகத்தில் இந்திய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் அகற்றப்பட்டு, கார்கில் வரை மட்டுமே எல்லைகள் குறிப்பிடப்பட்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில், நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக சுமார் நான்கு லட்சம் நோட்டுகள், அரசு அச்சகத் துறை சார்பில் அச்சிடப்பட்டன.
இந்த நோட்டுகள், இரண்டு மாதத்திற்கு முன், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் மாணவர் பயிற்சி ஏட்டின் (அன் ரூல்டு) முன் அட்டையில், இந்திய வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் அகற்றப்பட்டு, கார்கில் வரை மட்டுமே எல்லைகள் குறிப்பிடபட்டருந்தது.
புதுச்சேரி அரசின் இந்த செயலுக்கு புதுச்சேரி மாநில இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், இந்த தவறுக்கு காரணமான அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதையடுத்து, கல்வித்துறை, உடனடியாக அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.
அதில் மாணவர்களுக்கு வழங்கிய அனைத்து இலவச நோட்டுகளையும் ஆசிரியர்கள் திரும்பப் பெற வேண்டும் , அதில், சரியான இந்திய வரைபடம் ஒட்டிய பிறகு, மாணவர்களிடம் வழங்க வேண்டும் எனக் உத்தரவிட்டருந்தது.
இந்த சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications