ரூ. 3.5 லட்சம் லஞ்சத்துடன் மெட்ரோ வாட்டர் அதிகாரி கைது
சென்னை: தமிழகம் முழுவதும் வசூலித்த லஞ்சப் பணத்தை கொட்டி பெட்டியில் அள்ளியபோது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய என்ஜீனியரிங் இயக்குநர் கையும் களவுமாக பிடிபட்டார்.
என்ஜீனியரிங் இயக்குநர் என்ற பதவி, கிட்டத்தட்ட, பொதுப் பணித்துறையில் உள்ள தலைமைப் பொறியாளர் பதவியைப் போன்றதாகவும்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் பெருமளவில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், மாதா மாதம் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தின்போது லஞ்சப் பணத்தைக் கொண்டு வந்து சமர்ப்பிப்பதாகவும் லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் போனது.
நேற்று இந்த அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தமிழகம் முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை கண்காணித்து திடீர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.
எஸ்.பி. பவானீஸ்வரி மேற்பார்வையில் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் நேற்று மாலையில் இந்த கூட்டம் நடக்கும் போது சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் பைகளில் கொண்டு வந்திருந்த லஞ்ச பணத்தை கொட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீர் என்று புகுந்த போலீசார், அதிகாரிகள் கொட்டிய பணத்தை எல்லாம் வாரி அள்ளி சூட்கேஸ் பெட்டியில் போட்டார்கள். இதைத் தொடர்ந்து அங்கு இரவு 8 மணி வரை சோதனை நடந்தது.
லஞ்ச பணத்தை பைகளில் கொண்டு வந்து கொட்டிய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் என்ஜினீயரிங் இயக்குனர் குமரேசனுக்கு (56) லஞ்ச பணத்தைக் கொண்டு வந்ததாக சிலர் கூறினார்கள். சிலர் எதுவும் பேச மறுத்தனர்.
லஞ்ச பணத்தை எண்ணிப் பார்த்தபோது, அதில் ரூ. மூன்றரை லட்சம் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் என்ஜினீயரிங் இயக்குனர் குமரேசனிடம் விசாரணை நடந்தது. இதில், குற்றத்தை ஒப்புக் கொள்ள அவர் மறுத்தார். இருந்தாலும், சில அதிகாரிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குமரேசனை நேற்றிரவு 8 மணியளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.