வெனிசுலாவில் கடும் நிலநடுக்கம்-வீடுகள் தரைமட்டமானது
கராஹஸ்: வெனிசுலா நாட்டில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.4 ரிக்டர் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை சுமார் 1.40 மணிக்கு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உணரப்பட்ட இது பால்கான் மாகாணத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு அவசர சேவை பிரிவு தலைவர் லூயிஸ் டையாஸ் குர்பெலோ கூறுகையில்,
பால்கான் மாகாணத்தில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்கிசில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தால் அலறியடித்து கொண்டு வீதிக்கு வந்தனர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி 7 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் கராஹஸில் இருந்தவர்களும் அலறியடித்து கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி, தெருவில் வந்து நின்றனர். அவர்கள் அனைவரும் பல மணி நேரத்துக்கு வெளியிலே நின்றுவிட்டனர். பீதி மறைய நெடுநேரம் ஆனது என்றார்.
புயூர்டோ கேபெலோ நகருக்கு சுமார் 23 மேல் வடகிழக்கில், 6.2 மைல் கடல் ஆழத்தில் இது மையமிட்டதாக தெரிகிறது.
தப்பியது பெட்ரோல் நிறுவனம்...
தென் அமெரிக்கா நாடான வெனிசுலா எண்ணெய் வளம் நிறைந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் அந்நாட்டின் பரபலமான எல் பாலிடோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தில் அந்த நிறுவனத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.