கறுப்புப் பணமா... எங்களுக்குத் தெரியாது! - சுவிஸ் வங்கி கைவிரிப்பு
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கும் கறுப்புப் பணம் கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் கோடி என சமீபத்தில் நிதித் துறை அறிவித்தது. இதனால் இந்த தொகையை வைத்திருக்கும் வங்கிகள் அதுபற்றி கணக்குகளைத் தரவேண்டும் என இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் அவ்வாறு விவரங்கள் தர முடியாது என சுவிஸ் வங்கி ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
இதனிடையே, சுவிஸ் வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டதாகவும், இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே விரைவில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
தெரியவே தெரியாது!:
ஆனால் இப்போது தகவல்களைத் தராமல் மீண்டும் கைவிரித்துவிட்டது ஸ்விஸ் வங்கி. இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டை சேர்ந்தவர்களுடைய கறுப்பு பணம் பற்றிய புள்ளிவிவரங்களும் தங்களிடம் இல்லை என்று அந்த வங்கிகள் நேற்று அறிவித்துவிட்டன.
சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்பின் சர்வதேச தொடர்பு பிரிவின் தலைவர் ஜேம்ஸ் நசோன் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டு இருக்கிறார்.
டெல்லியில் ஆர்ப்பாட்டம்!:
இந்தத் தகவல் வெளியான கையோடு டெல்லியில் மாணவர்கள் துவங்கியுள்ள பாரத் புனர் நிர்மாண் தள் என்ற அமைப்பு டெல்லியில் இந்தியா கேட் அருகே போராட்டம் நடத்தியது.
இந்திய எம்பிக்கள், அதிகாரத்தில் உள்ளவர்களின் பெரும் பணம் அந்த வங்கிகளில் இருப்பதால்தான் வெளிநாட்டு வங்கிகள் பொய் சொல்வதாகவும், இந்தப் பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.3 லட்சம் வரை தரலாம் என்றும் முழக்கங்களை எழுப்பியபடி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.