சென்னை மாணவர் ஹிதேந்திரனின் இதயம் பொருத்தப்பட்ட பெங்களூர் சிறுமி திடீர் மரணம்
திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன் மற்றும் புஷ்பாஞ்சலி. இவர்களது ஒரே மகன் ஹிதேந்திரன். பிளஸ் ஒன் படித்து வந்த ஹிதேந்திரன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.
இந்த நிலையில் அவரது மூளை செயலிழந்தது. இதையடுத்து ஹிதேந்திரனின் பெற்றோர், தங்களது மகனின் உடல் உறுப்புகளைத் தானமாக தருவதாக அறிவித்தனர். இது தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டது. அசோகன் தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு தேடிச் சென்று ஹிதேந்திரனின் பெற்றோரைப் பாராட்டினார்.
இந்த நிலையில் ஹிதேந்திரனின் இதயம், முகப்பேர், செரியன் மருத்துவமனையில் இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக தவித்துக் கொண்டிருந்த அபிராமி என்ற 9 வயது பெங்களூர் சிறுமிககுப் பொருத்தப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஜெ.ஜெ.நகரில் உள்ள செரியன் மருத்துவமனைக்கு ஹிதேந்திரனின் இருதயம் போக்குவரத்து போலீசாரின் சிறப்பு ஏற்பாட்டில் 20 நிமிடங்களில் கொண்டு சேர்க்கப்பட்டது. உடனடியாக அந்த இருதயம், சிறுமி அபிராமிக்கு பொருத்தப்பட்டது.
உடல் உறுப்பு தானம் குறித்த பெரும் விழிப்புணர்வை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. ஹிதேந்திரனின் தாயாரின் செயலை பாராட்டி கடந்த மாதம் நடந்த சுதந்திர தின விழாவில் அவருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
ஹிதேந்திரனின் இருதயத்தை தானமாக பெற்ற சிறுமி அபிராமியின் தந்தை சேகர் பெங்களூரில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி மஞ்சு. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த பெண்தான் அபிராமி.
மாற்று இருதயம் பொருத்தப்பட்ட பிறகு செரியன் மருத்துவமனையில் அபிராமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் பெங்களூர் திரும்பினார்.
இந்த நிலையில், 10 நாட்களுக்கு முன்பு உடல் நிலை மோசமானதை தொடர்ந்து அபிராமி செரியன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார்.













Click it and Unblock the Notifications