பாக். தயாரித்த கள்ளநோட்டு சென்னையில் சிக்கியது
சென்னை: பாகிஸ்தானில் அச்சக்கடிக்கப்பட்டு இந்தியாவில் ரூ. 1,000 நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட இரண்டு மும்பை பெண்கள் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் ஜாகிர் ஷேக் (25), அல்கா ஷேக் (32), முகமது ராஜ் ஷேக் (19), ஆர். லோதா (25) ஆகிய நான்கு பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ருக்ஷானா (35) என்பவர் கொல்கத்தாவை சேர்ந்தவர்.
இவர்கள் ஐந்து பேரும் சென்னை தி.நகரில் உள்ள ஒரு கடையில் ரூ. 1,000 கள்ள நோட்டை கொடுத்து மாற்றியபோது போலீஸாரிடம் சிக்கினர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில்,
தி.நகர் பிளாட்பாரம் கடைக்காரர் ஒருவர் தன்னிடம் இரண்டு பேர் ரூ. 100க்கு பொம்மைகளை வாங்கி கொண்டு ரூ. 1,000 கள்ளநோட்டை மாற்றி செல்வதாக தகவல் தந்தார்.
இதையடுத்து விரைந்து சென்று, ஜாகிர் ஷேக், ராஜ் ஷேக் என்ற இரண்டு பேரை கைது செய்தோம். அவர்களிடம் இருந்து மேலும் 16 ரூ. 1,000 கள்ளநோட்டுகளை கைப்பற்றினோம்.
அந்த நோட்டு நமக்கு பக்கத்திலிருக்கும் நாடுகளில் அச்சடிக்கப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி பெரியமேடு பகுதியில் தங்கியிருந்த மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளோம்.
அவர்களிடம் இருந்து மூன்று மொபைல் போன், ரூ. 5 ஆயிரத்து 565 மதிப்புள்ள ரொக்க பணம் மற்றும் ரூ. 92 ஆயிரம் கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் கள்ளநோட்டு கொடுத்து வாங்கிய பொம்மைகள், பைகள் உள்ளிட்டவையும் பறிக்கப்பட்டது. அந்த கும்பலில் இருந்த லோதா மற்றும் ருக்ஷனா இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள்.
மற்ற மூவரும் கள்ளநோட்டு கும்பலோடு தொடர்புடையவர்கள். நாடு முழுவதும் கள்ளநோட்டுகளை பரப்புவதே இவர்களது நோக்கம். இவர்கள் ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் சென்னை வந்து, பெரியமேடியில் சுற்றுலா பகுதியில் தங்கியுள்ளனர்.
சென்னையில் அவர்கள் ரூ. 1 லட்சம் கள்ளநோட்டை புழக்கத்தில் விட வேண்டும் என தங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தங்களுக்கு கட்டளையிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு இந்த கும்பல் சமீபத்தில் ரூ. 50 ஆயிரம் அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது.
கும்பல் தலைவன் தலைமறைவு...
கள்ள நோட்டுகள் அசல் நோட்டுகளை போலவே உள்ளன. காந்தி படம் கூட நல்ல நோட்டுகளில் உள்ளதை போன்றே அச்சடித்துள்ளனர். மிகவும் கைதேர்ந்த தொழில்நுட்பத்தில் இந்த கள்ள நோட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு வேறு எதாவது கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என தொடர்ந்து விசாரித்து வருகிறோம். மேலும் கைது செய்யப்பட்டவர்களுடன் வந்த மன்னார் ஷேக் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகிறோம் என்றார்.
இதை தொடர்ந்து கள்ளநோட்டு கும்பல் தொடர்பாக விசாரிக்க தனி அமைப்படை அமைக்கப்பட்டு அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் சென்றுள்ளனர்.