திருவண்ணாமலை-இடிதாக்கி யாகம் செய்த 4 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பர்வத மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு யாகம் வளர்க்க சென்ற 4 பேர் இடிதாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலியான அந்த நான்கு பேர் கொருக்குப்பேட்டை ஆனந்தராஜ்(48), ராஜ் (56), கொடுங்கையூர் கஜபதி (60), கொட்டிவாக்கம் பூபாலன் (27) என தெரியவந்துள்ளது.
இந்த மலைகோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் மிகவும் செங்குத்தானவை என்பதால் ஏறுவது, இறங்குவது கடினம். இதனால் இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் விடிந்தவுடன் ஏறி, அந்தி சாயும் முன் இறங்குவது கடினம். அப்படி இயலாதவர்கள் கோவில் மண்டபத்திலே தங்கிவிடுகின்றனர்.
இவர்கள் நேற்று கொடுங்கையூரில் இருந்து ஒரு வேனில் மூலம் திருவண்ணாமலை வந்துள்ளனர். அதேபோல் திருவல்லிக்கேணியை சேர்ந்த 5 பேரும் டாடா சுமோ ஒன்றில் வந்துள்ளனர். யாகம் வளர்க்க தாமதமாக வந்த இவர்கள் மாலை வேளையில் மலை ஏறியதால் அங்கேயே தங்கிவிட்டனர். அவர்களுடன் மேலும் பலரும் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது ஒரு இடி எதிர்பாராத வகையில் கோபுரத்தின் கலசத்தில் விழுந்தது.
இதில் அந்த கலசம் உடைந்து கீழே படுத்திருந்த நான்கு பேர் மீது விழுந்து, அவர்கள் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக மற்றவர்கள் உயிர் பிழைத்தனர்.
இறைவனை வணங்க வந்த இடத்தில் நேர்ந்த இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.