தீபாவளி- சென்னையிலிருந்து 500 சிறப்பு பஸ்கள்
சென்னையில் இருந்து தினமும் 900 விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந் நிலையில் அக்டோபர் 17ம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இதர போக்குவரத்துக் கழகங்களிடம் இருந்து 300 'அல்ட்ரா டீலக்ஸ்' பஸ்களை பெற்று இயக்க விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை, சேலம், பெங்களூர், நாமக்கல், மன்னார்குடி நாகப்பட்டினம் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அரசு விரைவுப்போக்குவரத்து கழக பஸ்களுக்கு ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் நாளை (16ம் தேதி) முதல் இந்த பஸ்களுக்கு முன்பதிவு செய்யலாம்.
மேலும் இந்த பஸ்களுக்கான முன் பதிவை சென்னை கோயம்பேடு, தியாகராயநகர், தாம்பரம், பிராட்வே பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் செய்யலாம்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 24794709, 24794705 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட 43 முகவர்களிடமும் முன்பதிவு செய்யலாம்.
அதேபோல விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து 350 பஸ்களும் மற்றும் சேலம், கோவை, மதுரை கோட்டங்களில் மொத்தம் 150 பஸ்கள் வீதம் மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் சென்னைக்கும், சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படவுள்ளன.