மதிமுக மாநாடு திருப்புமுனை ஏற்படுத்தும்-வைகோ
திருச்சி: திருச்சியில் இன்று நடக்கும் மதிமுக மண்டல மாநாடு நிச்சயமாக திருப்புமுனை ஏற்படுத்தும், இளைஞர்கள் மத்தியில் எழுச்சியையும் ஏற்படுத்தும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருச்சி- அண்ணாநகர் வீர.இளவரசன் அரங்கில் இன்று பேரறிஞர் அண்ணா நிறைவு விழா மற்றும் திருச்சி மண்டல மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துரை வழங்குகிறார்.
மாநாட்டையொட்டி திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் மலைக்கோட்டை போன்ற மாநாட்டு மேடையும், கப்பல் வடிவத்தில் கொடிக்கம்ப மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா சிலைக்கு மாலை..
மாநாட்டு மேடையில் உள்ள அண்ணா சிலைக்கு இன்று காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
திருச்சி மண்டல மாநாட்டுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்புவதாக கூறியிருக்கிறார்.
மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்த மாநாடு நிச்சயமாக திருப்புமுனை ஏற்படுத்தும். இளைஞர்கள் மத்தியில் எழுச்சியையும் ஏற்படுத்தும்.
அண்ணாவின் கொள்கைகள், லட்சியங்களை இளம் தலைமுறையினர், மாணவர்களுக்கு எடுத்து சொல்வது தான் எங்கள் நோக்கம். அதனால் தான் அண்ணாவின் பொன்மொழிகளை திருச்சி நகரம் முழுவதும் விளம்பரப்படுத்தி இருக்கிறோம்.
தேர்தல் தோல்வி பற்றி மதிமுக கவலைப்படாமல் அண்ணாவின் கொள்கைகள் கருத்துக்களை நிறைவேற்றுவதில் தான் கவனம் செலுத்தி வருகிறது. அண்ணாவின் கருத்துக்களை இன்னும் அதிகமாக எடுத்துச்சொல்ல இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications