ஆஸி-3 இந்தியர்கள் மீது 70 பேர் கும்பல் மீண்டும் தாக்குதல்
அவர்கள் சுக்தீப் சிங்(26), அவரது சகோதரர் குர்தீர் சிங் மற்றும் அவரது உறவினர் முக்தையர் சிங் என்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் மூவரும் மெல்போர்னின் கிழக்கு பகுதியான எப்பிங்கில் உள்ள நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்த போது கடந்த 12ம் தேதி சில ஆஸ்திரேலியர்களால் முரட்டுத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து காயமடைந்தவர்களின் உறவினரான ஆன்கர் சிங் கூறுகையில்,
அவர்கள் மூவரும் அன்று காலை 11.00 மணி அளவில் நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்த போது அருகில் நடந்த பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட 70 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கியுள்ளது.
அவர்கள் அமைதியாக தான் விளையாடியுள்ளனர். ஆனால், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இவர்களை கேலி செய்து வம்புக்கு இழுத்துள்ளனர். அப்போது அவர்கள் பொறுமையாக இருந்துள்ளனர்.
அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இவர்களை பார்த்து உங்கள் நாட்டுக்கு ஓடி போ என கூறியுள்ளனர். அவர்கள் அந்த இடத்தை காலி செய்துவிட்டு காரில் செல்ல முயன்ற போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர்.
அவர்கள் 13 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். இந்த விஷயம் தொடர்பாக அந்த 70 பேரில் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக என்னிடம் தெரிவித்துள்ளனர் என்றார்.
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதத்தில் ஆஸ்திரேலியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து கடந்த மாதம் ஆஸ்திரேலிய அரசு பிரதிநிதிகள் இந்தியா வந்து வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணாவை சந்தித்தனர். அப்போது இந்தியர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இனவெறி தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.