சோமாலியாவில் யுஎஸ் அதிரடி தாக்குதல்-தீவிரவாதி பலி
வாஷிங்டன்: சோமாலியாவில் அமெரிக்க கடற்படை நடத்திய அதிரடி தாக்குதலில் எப்பிஐயால் தேடப்பட்ட தீவிரவாதி சலே அலி நபான் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இவர் அல்-கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் கூறுகையில்,
கென்யாவில் மொம்பசா நகரில் கடந்த 2002ம் ஆண்டு இஸ்ரேலுக்கு சொந்தமான ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு முக்கிய காரணமானவன் சலே அலி சலே நபான். இந்த திட்டத்தை திட்டிய நான்கு பேர்களில் ஒருவன்.
அவன் கடந்த 2006ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் உளவுத்துறையான எப்பிஐயால் அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து வருகிறான். அவன் கடந்த 1998ல் கென்யாவில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட வழக்கிலும் தேடப்பட்டு வருகிறான்.
இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பாக அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் உத்தரவில் அதிபர் ஒபாமா கையெழுத்திட்டார்.
இதையடுத்து 'ஆபரேஷன் செலஸ்டியல் பேலன்ஸ்' துவக்கப்பட்டது. இதில் இரண்டு ஏஹெச்-6 வகை லிட்டில் பேர்ட் ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்ட இந்த விமானங்கள் சோமாலியா கடற்கரையில் நபான் செல்லும் வாகனத்தை குறி வைத்து தாக்கிது.
இதில் அந்த வாகனம் நொறுங்கியது. இதை தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் அந்த இடத்தை சுற்றி வளைத்து உடல்களை கைப்பற்றின என்றார்.
மரணமடைந்த நபான், அல்-ஷபாப் என்ற அமைப்பை சேர்ந்தவர். இந்த அமைப்புக்கு அல்-கொய்தாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications