அளவுக்கதிகமாக ஆள் எடுப்பு-இன்போஸிஸ்
மைசூர்: நாங்கள் அதிகப்படியான ஆட்களை பணிக்கு எடுத்துவிட்டோம் என இன்போஸிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
மைசூரில் நிருபர்களிடம் பேசிய இன்போஸிஸ் சிஓஓ ஷிபுலால் கூறுகையில், "நிலைமை விரைவில் சரியாகிவிடும் என்றுதான் நம்பினோம். ஆனால் இன்னும் ஆர்டர்கள் வருவதில் தேக்க நிலைதான் நீடிக்கிறது.
இப்போதைக்கு சரியாகிவிடும் என்று சொல்ல முடியாது. இப்போதுள்ள சூழலில் நாங்கள் தேவைக்கதிமாகவே ஆளெடுத்துவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது.
எங்கள் வாடிக்கையாளர்களை இதற்காகக் குறை சொல்லவும் முடியவில்லை. காரணம், அவர்களின் வருவாயிலும் கணிசமான முன்னேற்றம் ஏதும் இல்லை. அதனால்தான் எங்களிடம் உள்ள ஆட்களுக்கு ஏற்ப ஆர்டர்கள் வரவில்லை...", என்றார்.
அடுத்து பேசிய இன்போஸிஸ் தலைமை செயல் அலுவலர் எஸ் கோபாலகிருஷ்ணன், "அடுத்த ஆண்டும் (2010) பெரிய அளவு வருமானமிருக்காது. எங்கள் வாடிக்கையாளர்கள் அவுட்சோர்ஸிங் பணிகளுக்காக அதிகம் செலவழிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை," என்றார்.