நளினி மனு-அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: தன்னை முன் கூட்டியே விடுவிப்பது குறித்து முடிவெடுக்க நீதிமன்ற உத்தரவுப்படி ஒராண்டுக்கு மேலாகியும் ஆலோசனை கமிட்டியை அரசு நியமிக்காததை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 18 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார் நளினி.
இதனால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று நளினி கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஆலோசனை கமிட்டி நிராகரித்தது.
இதை எதிர்த்து நளினி கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆலோசனை கமிட்டி முறையாக அமைக்கப்படவில்லை என்றும், சட்டப்பூர்வமான ஆலோசனை கமிட்டியை நியமித்து நளினியின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி ஒராண்டுக்கு மேலாகியும் சட்டப்பூர்வமான ஆலோசனை கமிட்டியை அரசு நியமிக்கவி்ல்லை என்றும், ஆகவே ஆலோசனை கமிட்டியை உடனே அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் தன்னை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி பி.ஜோதிமணி முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இதுபற்றி 2 வாரத்திற்குள் பதில் தரும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் அடுத்த மாதம் 6ம் தேதி விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications