தீபாவளி: அரசு பேருந்து முன்பதிவு துவங்கியது-அலைமோதும் கூட்டம்
சென்னை: தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 17ம் தேதி தான் என்றாலும் சென்னை தற்போதே கலைகட்ட துவங்கிவிட்டது. இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருப்பதால் கோயம்பேடு பேருந்து நிலையம் முழுவதும் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழகத்தின் தென் பகுதிக்கு செல்லும் ரயில்கள் அனைத்திலும் டிக்கெட் விற்பனை முடிந்துவிட்டதை அடுத்து இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்படுகிறது.
கூட்டத்தை கட்டுப்படுத்து அரசு கோயம்பேட்டில் வழக்கமாக இயங்கும் 4 கவுன்டர்களுடன் கூடுதலாக 2 கவுன்டர்களை திறந்துள்ளது. இதை தவிர்த்து தாம்பரத்திலும் 1 கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த கவுன்டர்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இங்கு 430 விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு செய்யப்படுகிறது. இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளம் அடக்கம்.
இதில் மக்களிடையே தற்போது ஏசி பஸ்களுக்கு தான் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. காலையில் இருந்து நீண்ட வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் ஏசி பஸ் தான் வேண்டும் என அடம்பிடித்து வருகின்றனர். ஆனால், ஏசி பஸ்கள் 50 தான் இருப்பதால் அவற்றுக்கான டிக்கெட் விரைவில் தீர்ந்துவிடும் என கூறப்படுகிறது.