இந்தியர்கள் மீதான தாக்குதலை மறைக்க முயன்ற ஆஸி.!
மெல்போர்ன்: மெல்போர்னில் மூன்று இந்தியர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை ஆஸ்திரேலிய போலீஸ் மூடிமறைக்க முயன்றதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து இந்திய அரசு தலையிட்டு பேசியது. இதையடுத்து ஆஸ்திரேலியா இந்தியர்கள் தாக்கப்படமாட்டார்கள் என உத்தரவாதம் அளித்திருந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதம காலமாக இந்தியர்கள் மீது எந்த தாக்குதல் சம்பவமும் நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த 12ம் தேதி மேற்கு மெல்போர்ன் பகுதியான எப்பிங்கில் கார் பார்க்கிங் பகுதியில் மூன்று இந்தியர்கள் தாக்கப்பட்டனர்.
அவர்களில் சுக்தீப் சிங் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரது சகோதரர் குர்தீப் சிங்கின் தாடையும், அவர்களது உறவினர் முக்தையார் சிங்கின் தோள்பட்டையும் உடைபட்டுள்ளது.
சுமார் 70 பேர் சேர்ந்து ஒட்டுமொத்தமாக தாக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் வெளியே வந்தால் வெளிநாட்டில் இருந்து படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்ற பயத்தில் இதை மறைக்க ஆஸ்திரேலிய போலீஸார் முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மெல்போர்னை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி கிளன் பார்கர் கூறுகையில்,
போலீஸார் விரைந்து சென்று நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.
அதை மூடிமறைக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. அப்போது அதை ஒரு பெரிய சம்பவமாக நாங்கள் கருதவில்லை. இது தொடர்பாக நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த இரண்டு நாட்களாக தான் இது தொடர்பாக மீடியா அதிக ஆர்வத்துடன் எழுதி வருகிறது. எப்பிங் பகுதிகளில் இது போன்று நடப்பது மிகவும் அரிதானது என்றார்.