ஜப்பான் புதிய பிரதமராக ஹடோயாமா தேர்வு-விரைவில் பதவியேற்பு
இன்று காலை ஜப்பான் நாடாளுமன்றத்தில் கீழ்சபையில் நடந்த ஒட்டெடுப்பில் மொத்தமுள்ள 480 உறுப்பினர்களில் 327 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கடந்த மாதம் 30ம் தேதி நடந்த தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த ஹடோயாமாவின் ஜனநாயக கட்சி 308 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் தோல்வியை சந்தித்துள்ளது. இதை தொடர்ந்து இன்று காலை பிரதமர் டாரோ அசோ மற்றும் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.
விரைவில் பதவியேற்க இருக்கும் ஹடோயாமாவின் முதல் வேலை கேபினட் அமைசச்ர்களை நியமிப்பது தான். இந்த வேலையை அவர் ஏற்கனவே துவக்கிவிட்டதாகவும், ஹட்சுயா ஒகாடாவுக்கு வெளியுறவு அமைச்சர் பதவியும், ஹிரோஹிசா பிஜி நிதி அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு நிகரான கொள்கை...
இந்நிலையில் ஹடோயாமா கூறுகையில்,
தேர்தல் வெற்றியுடன் மூலம் வரலாறு படைத்துள்ளேன். அதே நேரத்தில் வரலாற்று படைக்கும் பொறுப்பு இருப்பதையும் உணர்ந்து செயல்படுவேன்.
அமெரிக்காவுக்கு நிகராக ஜப்பானும் மதிக்கப்படும் வகையில் புதிய வெளியுறவு கொள்கைகளை வகுப்பேன் என்றார்.