புதிய அணை-ஆய்வு நடத்த கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி!!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டம் குறித்து ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு கேரள அரசு பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
கேரள- தமிழக எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கூறி வருவதை கேரளம் ஏற்க மறுத்து வருகிறது. இத்தனைக்கும் இந்த அணையின் பராமரிப்பு தமிழகத்திடம் உள்ளது.
இதைத் தட்டிப் பறிக்கும் வகையில், அணை மிகவும் பலவீனமாக உள்ளதாகவும் நீர்மட்டத்தை 132 அடிக்கு மேல் உயர்த்தினால் தங்கள் மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்கள் நீரில் மூழ்கிவிடும் என்றும் கூறி, இதற்குப் பதிலாக தனது எல்லைக்குள் புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது.
இதன்மூலம் முல்லைப் பெரியாறு அணையை பயனற்றதாக்கிவிட்டு தமிழகத்துக்கு நீர் தருவதை தவி்ர்க்க கேரளம் போடும் பயங்கர திட்டம் இது. இதனால் இத் திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக இரு மாநில அதிகாரிகள் நடத்திய பேச்சுகள் தோல்வியில் முடிந்துவிட்டன.
இந்நிலையில் அணை அமைந்துள்ள பெரியாறு வனவிலங்கு காப்பகப் பகுதியில் (தேக்கடி) புதிய அணை கட்டுவது குறித்து அளவீடு மற்றும் ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதித்துள்ளது.
இது கேரளத்தின் முயற்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த அனுமதியைத் தந்திருப்பது மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
இது குறித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை வரவேற்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் மத்திய அரசில் பலமிக்கதாய் உள்ள கேரள லாபி தனது வேலையை மீண்டும் காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications