'எகானமி கிளாஸ்' மாட்டு தொழுவமா-சசி தரூருக்கு காங். கண்டனம்
டெல்லி: 'மாட்டுத் தொழுவமான' எகானமி கிளாஸ் வகுப்பில் பயணம் செய்ய நான் தயங்கவில்லை என்று கூறியுள்ள மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசி தரூரின் பேச்சுக்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சி, தரூரின் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று, அறிவற்ற பேச்சு என்று வர்ணித்துள்ளது.
ட்வீட்டரில் நீங்கள் மத்திய அரசின் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவாக விமானங்களில் எகானமி வகுப்புகளில் பயணம் செய்வீர்களா என்று கேட்கப்பட்டிருந்தது. இதற்கு சசி தரூர் அளித்த பதிலில், நமது புனித பசுக்களுக்கு ஆதரவு தெரிவித்து மாட்டுத் தொழுவ வகுப்பில் பயணம் செய்ய நான் தயங்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார் சசி தரூர்.
இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மத்தியில் சிக்கன நடவடிக்கையை அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு அமல்படுத்தி வரும் மத்திய அரசை கொதிப்படைய வைத்துள்ளது.
இந்தியாவுக்குள் பயணம் செய்யும் மத்திய அமைச்சர்கள் எகானமி வகுப்புகளில்தான் பயணம் செய்ய வேண்டும் என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவை ஏற்று சோனியா காந்தி கூட தற்போது எகானமி வகுப்புகளில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளார். அதற்கு ஒரு படி மேலே போன ராகுல் காந்தி ரயிலில் பயணித்தார்.
இந்த நிலையில்தான் இதையெல்லாம் நக்கலடிக்கும் வகையில் பேசியுள்ளார் தரூர்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. சசி தரூருக்கு இது சாதாரண கருத்தாக இருக்கலாம். ஆனால் இதை காங்கிரஸ் கட்சி தீவிரமாக கருதுகிறது.
காரணம், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் எகானமி வகுப்பில்தான் விமான பயணத்தை மேற்கொள்கின்றனர். எனவே இதுபோன்ற பொறுப்பேற்ற, அறிவற்ற பேச்சை ஏற்க முடியாது.
இந்தப் பேச்சுக்காக சசி தரூரின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா என்பதை நான் சொல்ல முடியாது. அது பிரதமரின் உரிமை. சசி தரூரின் கருத்து சரியல்ல, ஏற்க முடியாதது என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்தாகும்.
சசி தரூர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமைதான் தீர்மானிக்கும். சசி தரூரின் பேச்சை எகானமி வகுப்பிலோ அல்லது சாதாரண பஸ்சிலோ பயணம் செய்யும் எந்த ஒரு இந்தியரும் ஏற்க முடியாது என்றார் ஜெயந்தி நடராஜன்.
தினசரி ரூ. 1 லட்சம் வாடகை கொடுத்து ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்த சசி தரூரை, அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடுமையான உத்தரவின் மூலம் வெளியேற்றினார் என்பது நினைவிருக்கலாம். அது முதல் கடுப்பில் இருக்கிறாராம் சசி தரூர். இந்த நிலையில்தான் எகானமி வகுப்பை கிண்டலடித்துப் பேசியுள்ளார் சசி தரூர்.












Click it and Unblock the Notifications