சைதை இரட்டைக் கொலை-ஜாமீனில் வந்த சங்கீதா தலைமறைவு
சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டில் அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தவர் ரெயில்வே பொறியாளர் அனந்தகிருஷ்ணன், இவரது மனைவி யமுனா. அனந்தகிருஷ்ணனுக்கும், சங்கீதாவுக்கும் இடையே கோவில் ஒன்றில் வைத்து அறிமுகம் ஏற்பட்டது.
தனக்குக் குழந்தைகள் இல்லாததால், சங்கீதாவை தனது மகள் போல பாவித்து நடத்தினார் அனந்தகிருஷ்ணன். ஆனால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சங்கீதா, ஆனந்த கிருஷ்ணன் தம்பதியை தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து கொலை செய்து சொத்துக்களைப் பறிக்க திட்டமிட்டார்.
கடந்த ஆண்டு நடந்த இந்த இரட்டைக் கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் 2 நாட்களில் குற்றவாளிகளான சங்கீதா, அவரது கணவர் தினேஷ் மற்றும் செந்தில்நாதன், புகழேந்தி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நாளடைவில் போலீஸாரால் கண்டு கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த நிலையில் சங்கீதா ஜாமீனில் வெளி வந்து விட்டார். போலீஸ் தரப்பில் உரிய முறையில் ஆட்சேபனை தெரிவிக்காமல் விட்டு விட்டதால் சங்கீதா வெளியே வர நேரிட்டது.
ஜாமீனில் வெளியே வந்த சங்கீதா, தலைமறைவாகி விட்டார். ஒரு வீட்டிலும் எப்படியோ வேலைக்காரப் பெண்ணாக சேர்ந்துள்ளார். அந்த வீட்டிலும் 100 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளாராம்.
காவல்துறையின் கவனக்குறைவால் தற்போது சங்கீதாவைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு சென்னை விரைவு கோர்ட் தற்போது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.