பாளையங்கோட்டை சிறையில் எஸ்ஏ ராஜாவை கொல்ல முயற்சி
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் வடக்கன்குளத்தை சேர்ந்த கல்லூரி அதிபர் எஸ்ஏ ராஜா, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து சிறை வாளகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பாதுகாப்புக்காக இரண்டு காமண்டோ படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று காலை உள்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதுரையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தனக்கு காய்ச்சல் இருப்பதாக கூறி சிறைச்சாலை மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத சமயத்தில் அவர் மறைத்து வைததிருந்த அலுமினிய தட்டை கத்தி போல் கூர்மையாக வளைத்து எஸ்ஏ ராஜா மீது பாய்ந்தார். இதைபார்த்த எஸ்ஏ அங்கிருந்து சத்தம்போட்டு கொண்டே எழுந்து ஓடினர்.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த கமாண்டோ படை வீரர்கள் அந்த கைதியை மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி, ஜெயிலர் அமிர்தலால் ஆகியோர் அந்த கைதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் பற்றி சிறைதுறை ஏடிஜிபி ஷ்யாம் சுந்தர் மற்றும் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலடி அருணா கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு ஆயுள் தண்டனை கைதியின் தூண்டுதலின் பேரிலேயே எஸ்ஏ ராஜாவை அந்த கைதி கொல்ல முயன்றதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.