சேலம் மாணவரின் உடல் உறுப்புகள் தானம்-சென்னை பயணம்
சேலம்: சேலத்தில் நடந்த விபத்தில் சிக்கி மூளைச் சாவை சந்தித்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மாணவரின் உடல் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சேலம் குகை ரங்கீத் தெருவைச் சேர்ந்தவர் நிஜானந்தன், வர்த்தககர். அவருடைய மகன் ரஞ்சித்குமார். நிஜானந்தனின் பேரன் சபரீஷ் (வயது 19), பாலிடெக்னிக் மாணவர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் டி.சி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாணவர் சபரீஷ் அவருடைய நண்பருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சேலம் அஸ்தம்பட்டி சென்றார்.
ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அருகே அவர்கள் சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற மாணவர் சபரீஷ், தலையின் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியானூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு மாணவர் சபரீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அது குறித்து டாக்டர்கள் மாணவரின் பெற்றோரிடம் தெரிவித்தனர். மகனின் இந்த நிலையை கண்டு அவர்கள் பெரும் துயரம் அடைந்தனர்.
இருந்தபோதிலும் மகனின் உடல் உறுப்புகள், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்ற நல்லெண்ணத்தில் சபரீஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை நிர்வாகம், இந்த தகவலை சென்னையில் உடல் உறுப்புகள் தானத்தை மேற்கொள்ளும் தனியார் அமைப்புக்கு தகவல் கொடுத்து, சபரீஷின் உடலை சென்னைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சபரீஸின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது.