மது.. பெண்கள் காவல் நிலையம் முற்றுகை
சிவகாசி: சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் மது விற்பனையை தடுக்க கோரி பெண்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி தாலுகா, சில்லையநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா (45). இவர் டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து பஸ் நிறுத்தம் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.
இதே ஊரின் ரோட்டின் கிழக்கு பகுதியில் வச்சக்காரபட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முத்துமாரி என்பவர் பள்ளிக்கூடம் அருகே மது விற்பனை செய்கிறார்.
இந்த கிராமத்தில் போட்டி போட்டு மது விற்பனை நடைபெறுகின்றறது. இதனால், போதையில் பலர் மோதிக் கொண்டு அடிக்கடி பிரச்னை செய்கின்றனர்.
முத்தையா, நேற்று முன்தினம் இதே ஊரை சேர்ந்த நாராயணசாமியின் வீட்டில் புகுந்து அவரின் உடலில் பல இடங்களில் கீறி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதனைக் தட்டிக்கேட்ட பெண்களை ஆபாசமாக திட்டி அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.
முத்தையா சிவகாசி கிழக்கு போலீசாருக்கு மாமூல் கொடுப்பதால் தான் இவரை போலீசார் கண்டு கொள்வது இல்லை என புகார் கூறிய பெண்கள் கிராமத்திற்குள் மது விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று கோரி சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
முற்றுகையிட்ட பெண்களிடம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், முத்தையாவைப் பிடித்து வைத்துள்ளோம். இனி கிராமத்தில் மது விற்பனை நடக்காது என உறுதி கூறியதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications