ஓட்டுக்களுக்காக இந்துத்வாவை விட்டுத் தர முடியாது- ஆர்.எஸ்.எஸ்.
அகமதாபாத்: ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கமான கட்சிகளுக்கு தேர்தலில் வாக்குகள் குறைந்தாலும் கூட, இந்துத்வா, இந்து போன்ற பதங்களைப் பயன்படுத்துவதை ஆர்.எஸ்.எஸ். கைவிடாது என்று கூறியுள்ளார் அதன் தலைவர் மோகன் பகவத்.
அகமதாபாத்தில் நடந்த இந்துத்வா குறித்த கருத்தரங்கின் நிறைவில் அவர் பேசுகையில், இன்று உலகில் இந்து மதம் அத்தியாவசியத் தேவையாகி விட்டது. இந்த வார்த்தைக்கு நிகரான வார்த்தை இன்று உலகில் வேறு எதுவும் இல்லை. அதை நாம் விட முடியாது. விஸ்வ இந்து பரிஷத் கைவிட முடியாது.
நாம் அனைவரும் எப்போதும் இந்துக்கள், இந்துத்வா போன்ற பதங்களை சொல்லியபடியேதான் இருப்போம். காரணம், அது உண்மையின் வெளிப்பாடாகும்.
ஒரு கூட்டத்தில் இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதால்தான் ஓட்டுக்கள் குறைவாக கிடைக்கின்றன. அதைக் கைவிட்டால் கூடுதல் வாக்குகளைக் கவர முடியுமே என்று சிலர் கேட்டனர். அதற்கு நான் எங்களுக்கு ஓட்டுக்கள் தேவையில்லை. அது தேவைப்படுவோரிடம் போய் இந்தக் கேள்வியைக் கேளுங்கள் என்றேன்.
அதற்கு அவர்கள், நீங்கள் மாற வேண்டும் என்றனர். மாற முடியாது என்று நான் பதிலளித்தேன்.
இந்து, இந்துத்வா என்ற சொல்லைப் பயன்படுத்துவதால்தான் நமக்கு செல்வாக்கு குறைகிறது என்றால் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். இருந்தாலும், போனாலும், இந்துத்வாவோடே இருப்போம் என்றார் பகவத்.












Click it and Unblock the Notifications