மாட்டுத் தொழுவ பேச்சு-மன்னி்ப்பு கேட்டார் தரூர்
டெல்லி: விமானங்களில் உள்ள எகானமி வகுப்பு குறித்து தான் கூறிய கருத்துக்கள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் ட்வீட்டர் மூலம் மன்னிப்பு செய்தி அனுப்பியுள்ளார்.
நேற்று நள்ளிரவில் இந்த ட்வீட்டர் மன்னிப்பு செய்தி அனுப்பப்பட்டது.
லைபீரியா சென்றுள்ள சசி தரூர் அங்கிருந்து இந்த செய்தியை அனுப்பினார். அதில், மாட்டுத் தொழும் என்ற வார்த்தையை உண்மையில் ஒரு செய்தியாளர்தான் பயன்படுத்தினார். அதை நான் திருப்பித் தான் கூறினேன்.
மேலும், விமானங்களில் ஆடு மாடுகளைப் போல அடைத்து ஏற்றிச் செல்லும் விமான நிறுவனங்கள் என்ற பொருள்படும் படியாகத்தான் அந்தக் கருத்தைக் கூறினேன். மற்றபடி எகானமி வகுப்பில் பயணம் செய்வோரை நான் இழிவுபடுத்தும் வகையில் கூறவில்லை.
எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் எனது பேச்சு மனதைக் காயப்படுத்துவதாக இருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தரூர்.