சென்னையில 2 பேர் மர்ம சாவு-தற்கொலையா... கள்ளச் சாராயமா?
சென்னை: சென்னை திருவொற்றியூர் போலீஸ் சோதனை சாவடி அருகே 2 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இருந்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் இருவரும் திருவொற்றியூர் பட்டினத்தார்கோயில் குப்பத்தில் வசித்த ஆறுமுகம்(42) மற்றும் புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரை சேர்ந்தவர் முன்னா(37) என தெரியவந்துள்ளது.
இருவரும் நல்ல நண்பர்களாம். இதில் ஆறுமுகம் மீனவர். முன்னா மீன் கடையில் வேலை பார்த்து வந்தவர். இவர்கள் கடைசியாக இருவரும் நேற்று இரவு திருவெற்றியூர் சந்தை பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது குடித்திருக்கிறார்கள்.
இந்நிலையி்ல அவர்கள் இருவரும் அருகிலிருக்கும் சோதனை சாவடிக்கு அருகே மர்மமான முறையில் பிணமாக கிடந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அவர்கள் இருவரும் கள்ளச்சாராய குடித்து இறந்தார்களா அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா என போலீஸார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ஆறுமுகத்தின் மனைவி மேகலா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னதாக அவருடன் சண்டை போட்டு கோபித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தாலும், முன்னா ஏன் இறந்தார் என்ற கேள்வி எழுகிறது.
முன்னாவுக்கு மனைவியும் 2 வயதில் பாத்திமா என்ற குழந்தையும் உள்ளனர்.
இதையடுத்து போலீஸார் பல கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் இந்த பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும் என தெரிகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.