மகாராஷ்டிர தேர்தலில் 'ராகுல் புகழ்' கலாவதி போட்டி
மும்பை: ராகுல் காந்தியால் லோக்சபாவில் பேசப்பட்ட விதவைப் பெண் கலாவதி, மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
கடந்த ஆண்டு லோக்சபாவில் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின்போது ராகுல் காந்தி கலாவதி என்ற பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டு அவரது வறுமை நிலையை விளக்கிப் பேசினார். இதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் கலாவதி.
கலாவதி பந்துர்கர் என்ற பெயருடைய அந்த ஏழை விதவைப் பெண் தற்போது மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
விதர்பா ஜனாந்தோலன் சமிதி என்ற கட்சியின் சார்பில் கலாவதி போட்டியிடுகிறார்.
மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர்தான் கலாவதி. அங்குள்ள ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். விதர்பா பகுதியில் ஏராளமான விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் இவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
கடந்த ஆண்டு கலாவதி வசித்து வரும் ஜல்கா கிராமத்திற்கு ராகுல் காந்தி வந்தபோது கலாவதியின் நிலை அறிந்து வேதனைப்பட்டார். இதைத்தான் தனது லோக்சபா பேச்சின்போதும் அவர் குறிப்பிட்டார்.
அவருக்குப் பல உதவிகளைச் செய்வதாகவும் வாக்களித்தார் ராகுல் காந்தி. ஆனால் இதுவரை ராகுல் கூறிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேறு விஷயம்.
இந்த நிலையில், 48 வயதாகும் கலாவதியை தேர்தலில் நிறுத்த விதர்பா ஜனாந்தோலன் கட்சி முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் கிஷோர் திவாரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications