புலிகள் என நினைத்து 9 குமரி மீனவர்கள் கேரளாவில் கைது
நாகர்கோவில் குமரி மாவட்ட மீனவர்கள் 9 பேரை விடுதலை புலிகள் என சந்தேகப்பட்டு கேரள போலீசார் சிறை பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கடலுக்குள் வாரக்கணக்கில் மீன்பிடிக்க செல்வார்கள்.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி பகுதியை சேர்ந்த ராபர்ட் கென்னடி, வாணியக்குடி வில்பிரட், மண்டைக்காடு புதூர் ராம்போ, கிங்ஸ்லி, அந்தோணி, சூசை, ஜான்சன், குளச்சல் ஸ்டான்லி, ராமநாதபுரம் மாவட்டம் வேர்காடு ஜான் கென்னடி ஆகிய 9 பேர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
இவர்கள் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களது விசைப்படகில் பழுது ஏற்பட்டதால் விழிஞ்சம் பகுதியில் கரை ஓதுங்கினர். அவர்களது வருகை விழிஞ்சம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அவர்கள் விடுதலை புலிகளாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு போலீசார் 9 பேரையும் சிறை பிடித்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது மீனவர்கள் தங்களது சொந்த ஊர், பெயர் உள்ளிட்டவைகளை தெரிவித்தனர். அவர்கள் கூறிய தகவல் உண்மையா, என்று குமரி மாவட்ட போலீசாருடன் தொடர்பு கொண்டு விழிஞ்சம் போலீசார் விபரங்களை கேட்டனர். விழிஞ்சம் போலீசார் கூறிய தகவலின் அடிப்படையில் குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் கேரள போலீசாரின் பிடியில் உள்ள மீனவர்களின் சொந்த ஊர், பெயர் விவரங்களை குளச்சல் போலீசார் சேகரித்து வருகின்றனர். மீனவர்களின் அடையாள சான்றுகளை சேகரித்து விழிஞ்சம் போலீசாருக்கு கொடுத்து சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க குமரி மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications