இலங்கை தமிழர்களை காப்பாற்ற உண்ணாவிரத போராட்டம்
நெல்லை: பாளையங்கோட்டையில் இன்று இலங்கை தமிழர்களை காப்பாற்ற கோரி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து ராணுவத்தின் கட்டுபாட்டில் உள்ள முள் வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை விடுதலை செய்து புணர்வாழ்வு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாளை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபை சார்பாக பாளை பஸ் நிலையம் எதிரே இன்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு பாதிரியார் அந்தோணி சாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏவும், முஸ்லீம் லீக்கின் மாநில பொது செயலாளருமான கோதர் மைதீ்ன் முன்னிலை வகித்தார். சிஎஸ்ஐ டாயோசீசன் பிஷப் ஜேஜே கிறித்துதாஸ் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார்.
உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி இ.கம்யூ கட்சி தேசிய குழு தலைவர் நல்லகண்ணு, திமுகவை சேர்ந்த மேயர் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் முன்னாள் எம்பி தனஷ்கோடி ஆதித்தன், அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், மா.கம்யூ மாவட்ட செயலாளர் பழனி, மற்றும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
வின்சன் தே. பால் சபையை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகளும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.