தூத்துக்குடியில் பல லட்சம் ரூபாய் பவளப்பாறைகள் பறிமுதல்
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் இருந்து சரக்கு கன்டெய்னர்கள் மூலம் பொருட்கள் வருவது வழக்கம்.
கன்டெய்னர்கள் மூலம் பொருட்களை சுங்கத்துறையினர் திடீர் சோதனை செய்தனர். அதில், இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கன்டெய்னரில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிய கடல் வாழ் உயிரினமான பவளப்பாறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த கன்டெய்னர் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கன்டெய்னரில் உள்ள பொருட்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அது குறித்து விசாரித்த அதிகாரிகள், அந்த முகவரி போலியானது என்பதை அறிந்து அதி்ர்ச்சி அடைந்தனர்.
அதிகாரிகள் விசாரணையில், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அலங்கார மீன் தொட்டிகளில் மீன்களுக்கு உணவாகவும், அலங்காரப் பொருளுக்காகவும் அவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
இந்தியாவில் பவளப்பாறைகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய, மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.