ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
ராமேஸ்வரத்திலிருந்து செப்டம்பர் 16 ம் தேதி அன்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் வலுக்கட்டாயமாக பிடித்து சென்றனர்.
அவ்வாறு பிடித்துச் சென்றவர்களை தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், மீனவர்கள் சென்ற ஐந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், மீனவர்களில் நான்கு பேரை மட்டும், மன்னார் கோர்ட் உத்தரவுப்படி நேற்று முன்தினம் அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.
மற்ற 17 மீனவர்களும் நேற்று காலை, தலைமன்னார் போலீசாரால், மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதி விசாரணைக்குப் பின், மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 17 மீனவர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இலங்கை - இந்திய தூதரக அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளைப் பராமரிக்க, மன்னார் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 21 மீனவர்களையும், ஐந்து படகையும் உடனடியாக விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் பதட்டம் நிலவி வருகிறது.