தமிழக மீனவர்களைக் காக்க நிரந்தர நடவடிக்கை தேவை- சரத்குமார்
சென்னை: இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து, அவர்களைக் காக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சரத்குமார் விடுத்துள்ள அறிக்கை:
ராமேசுவரம், நாகை உள்பட தென் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
இலங்கை பிரதமர் இந்தியா வருவதும், இந்திய அதிகாரிகள் இலங்கை செல்வதும் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்று விளையாடி மகிழ்வதும் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை பிரதிபலித்தாலும், தமிழக மீனவர்கள் மீது மட்டும் இலங்கை கடற்படையினர் காட்டும் ஆவேசம் ஏன் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிவதில்லை.
இலங்கை கடல் எல்லைக்கு செல்வதால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்று இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 16-ந் தேதி மாலை ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற படகுகள் இந்திய கடற்பகுதிக்குள் வந்து கொண்டிருக்கும் பொழுது இலங்கை கடற்படையினர் நமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்து நம் மீனவர்களை தாக்கி 21 பேரையும், 5 படகுகளையும் சிறைபிடித்து சென்று விட்டார்கள்.
குமாரவேலு என்பவரது படகு பழுதாகி இருந்ததால் கடலில் விட்டு, விட்டு குமாரவேலை மட்டும் பிடித்துச் சென்றுள்ளனர். இதுபோன்ற நிலை நீடித்தால் தமிழக மீனவர்கள் எதிர்காலம் என்னாவது.
இலங்கை கடற்படையினரின் இந்த செயல் எப்போது நிறுத்தப்படும்? மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இதுபோன்ற பிரச்சினை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தமிழக கடலோர காவல்படையும், இந்திய கடற்படையும் நம் மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மீனவர்கள் பிரச்சினையை முக்கிய பிரச்சினையாக மத்திய, மாநில அரசுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். நமது மீனவர்கள் தொழிலுக்கும், உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு உத்திரவாதத்தை அளித்திட உறுதி ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications