'எத்தனை நடிகர்கள் கட்சி தொடங்கினாலும்..!'
ஓசூர்: எத்தனை நடிகர்கள் கட்சி தொடங்கினாலும், விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று அக் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
ஓசூர் அருகே பாகலூரில் இரட்டைமலை சீனிவாசனார் நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய திருமாவளவன்,
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கார் மிகப்பெரிய அறிவாற்றல் படைத்த மகான். தந்தை பெரியார், புத்தர் ஆகியோருக்கு இணையான சிறப்புப் பெற்ற அம்பேத்காருக்குத்தான் புத்தருக்கு அடுத்தபடியான ஏராளமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
உலகில் மிகப்பெரிய நூலகம் லண்டனில் தான் உள்ளது. அங்கு இரண்டே 2 தலைவர்களின் படம் தான் வைக்கப்பட்டுள்ளன. ஒருவர் காரல் மார்க்ஸ், மற்றொருவர் அண்ணல் அம்பேத்கார்.
அப்படிப்பட்ட பெரும் புகழ் படைத்த அம்பேத்காரின் சிலைகளை திறக்கவும், சிலைகள் வைக்கவும், அரசு ஆணை தடுப்பதாகக் கூறி அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர் தாசில்தார் அலுவலகங்களிலும், காவல் நிலையங்களிலும் கூட அம்பேத்காரின் படத்தை வைப்பதில்லை.
நாம் ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தர்ம சங்கடம் ஏற்படுத்தக்கூடாது என்று எண்ணுகிறோம்.
சேரி மக்களுக்காக மட்டுமின்றி அனைவருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தொடர்ந்து பாடுபடும்.
எத்தனை நடிகர்கள் கட்சி தொடங்கினாலும், விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சியை தடுக்க முடியாது. இது ஒரு பேரியக்கம். தமிழ் நாட்டில் நமது இயக்கம் மிகவும் அழுத்தமாக வளர்ந்து உள்ளது.
டாக்டர் அம்பேத்கார், தந்தை பெரியார், இரட்டை மலை சீனிவாசன், அயோத்தி தாசர் போன்ற தலைவர்களின் வழி காட்டுதலின்படி, அணி திரண்டு போராடுவோம்.
வருகிற 2011 சட்டமன்ற தேர்தலில் நாம் நமது எழுச்சியை நிலை நாட்டுவோம் என்றார்.