வாலிபரின் இதயம் பொருத்தப்பட்ட பெண் குணமடைகிறார்
சென்னை: சேலத்தில் நடந்த விபத்தில் மூளைச்சாவை சந்தித்த வாலிபரின் இதயம் பொருத்தப்பட்ட இளம் பெண் குணமடைந்து வருகிறார்.
இந்த சிறப்பு வாய்ந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட சென்னை அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி விஜயா. இவர்களது மகள் அபிநயா (20) பிளஸ்-2 முடித்துவிட்டு, லேப் டெக்னீசியன் படிப்பு படித்துள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜுன் மாதம் முதல் அபிநயாவுக்கு இருமலுடன் கூடிய மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரை தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் காண்பித்தபோது அபிநயாவின் இருதயம் பெரிய அளவில் வீங்கி போய் இருந்தது தெரியவந்தது.
இதனால் அவரை சென்னை அரசு மருத்துவமனையில் கடந்த ஜுலை மாதம் அனுமதித்தனர். அங்கு இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் விஸ்வகுமார், மாரியப்பன், சிவராமன் மற்றும் மயக்க மருந்து டாக்டர் ஜெயராமன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பரிசோதித்து பார்த்ததில் இருதய மாற்று அறுவை சிகிச்சையை தவிர, வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.
இதனால் இருதயத்திற்காக அபிநயா சென்னை ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன், அவரது தாய் விஜயாவும் உடன் இருந்தார்.
இந்த நிலையில், சேலத்தில் ஒரு விபத்தில் 17 வயது வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். அவரது இருதயத்தை தானமாக கொடுக்க பெற்றோர்கள் முன்வந்தனர். இதைத் தொடர்ந்து அந்த வாலிபரின் இருதயம் அவசரமாக சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அபிநயாவுக்கு நேற்று முன்தினம் பொருத்தப்பட்டது. இது சென்னை அரசு மருத்துவமனையில் நடந்த முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.
தற்போது இளம் பெண் அபிநயா வேகமாக குணமடைந்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் வீடு திரும்பவுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அபிநயாவுக்குக் கிடைத்துள்ள புது வாழ்வு குறித்து அவரது தாயார் விஜயா கூறுகையில், ஏழை குடும்பமான எங்களுக்கு இந்த மருத்துவமனையில் அளித்த சிகிச்சை மகத்தானது. எனது மகளுக்கு மாற்று இருதயம் பொருத்தியதன் மூலம் புதுவாழ்வு கிடைத்துள்ளது. இருதயம் கொடுக்க காரணமாக இருந்த வாலிபரின் பெற்றோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
கருணாநிதி பாராட்டு
இதற்கிடையே, டாக்டர்கள் குழுவை முதல்வர் கருணாநிதியும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியாவிலேயே தமிழகம்தான் பொதுமக்களுக்குத் தேவையான ம்ருத்துவ சேவைகளை வழங்குவதில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து முன்னணி மாநிலமாக திகழ்ந்து அனைத்துத் தரப்பினரின் பாராட்டுதல்களையும் பெற்று வருகிறது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில், இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருக்கு அவரது இருதயம் செயலிழந்து, மாற்று இருதயம் பொருத்தப்பட வேண்டிய நிலையில், விபத்தில் சிக்கி மூளைச்சாவை சந்தித்த இளைஞர் ஒருவரின் இருதயம் தானமாகக் கிடைத்திட - அந்த இருதயத்தை எடுத்து நேற்று நடைபெற்ற வெற்றிகரமான இருதய மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் அந்தப் பெண்ணுக்கு அந்த இருதயம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இருதய அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்த மருத்துவர் குழுவின் தலைவர் டாக்டர் விஸ்வகுமார் மற்றும் டாக்டர்கள் மாரியப்பன், அமிர்தராஜ், சிவராமன், ஜெயராமன் ஆகியோருக்கு எனது மகிழ்ச்சியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.