ஸ்வைன்-மகா. மேலும் 4 பேர் மரணம்-இந்தியாவில் பலி 238
டெல்லி: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிராவில் 4 பேரும், ஆந்திராவில் ஒருவரும் பலியானார்கள். இதையடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் வரை இந்தியாவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு 233 பேர் பலியாகி இருந்தனர். நேற்று மகாராஷ்டிராவில் 4 பேர் இந்த காய்ச்சலால் இறந்துள்ளனர்.
இதையடுத்து அந்த மாநிலத்தில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. அங்கு இதுவரை 101 பேர் இறந்துள்ளனர்.
ஆந்திராவில் ஒஸ்மானியா மருத்துவமனையில் லட்சுமி என்ற பெண்ணும், ஆந்திர அரசு மருத்துவமனையில் மல்கஜ்கிரி பகுதியை சேர்ந்த சத்யநாராயணா என்பவரும் பலியானார்கள்.
இவர்களில் ஒருவர் மட்டுமே பன்றி காய்ச்சலால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. மற்றொருவரின் ரத்த மாதிரி முடிவுகள் இன்னும் கிடைக்காததால் உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து அந்த மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் இந்த நோய் மேலும் 298 பேருக்கு பரவியுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 116 பேருக்கும், மகாராஷ்டிராவில் 58 பேருக்கும் இந்த காய்ச்சல் தொற்றியுள்ளது.
தமிழகத்தில் 32, ஆந்திராவில் 23, கர்நாடகாவில் 20, கேரளாவில் 20, ஹரியானாவில் 16 பேருக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.