35 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்! - பிரபுல் படேல்
திருச்சி: 'இந்தியா முழுவதும் 2-ம் நிலையில் உள்ள 35 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்' என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறினார்.
மத்திய அமைச்சர் பிரபுல் படேல் சனிக்கிழமை காலை திருச்சி வந்தார். திருச்சியில் கட்டப்பட்டு உள்ள புதிய விமான நிலையத்தைப் பார்வையிட்ட அவர், விமான நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
நமது நாட்டில் மொத்தம் 35 Non Metro விமான நிலையங்கள் (இரண்டாம் நிலை விமான நிலையங்கள்) உள்ளன. இந்த விமான நிலையங்கள் அனைத்திலும் பல்வேறு மேம்பாட்டு பணிகள், விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் முடிவடைந்துவிடும்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.2,500 கோடி செலவில் விரிவாக்கப் பணிகள் மற்றும் விமான நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 35 இரண்டாம் நிலை விமான நிலையங்கள் மட்டுமல்லாது இதர விமான நிலையங்களிலும் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை, கோவை விமான நிலையங்களும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமான நிலையங்களில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருன்றன. குறிப்பாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் அவர்.