ஸ்வைன்: புனேவில் இருவர் பலி-இந்தியாவில் 241 பேர் மரணம்
டெல்லி: பன்றி காய்ச்சல் நோய்க்கு இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புனேவில் இருவர் உட்பட மொத்தம் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தத்தாநகர் பகுதியை சேர்ந்த மகாநந்த சோன்காம்ளே என்ற 26 வயது வாலிபர் சிகிச்சை பலனளிக்காமல் சஷூன் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார்.
அவர் இதற்கு முன்னதாக சஞ்சீவன் மற்றும் பாரதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். அவருக்கு பன்றி காய்ச்சல் இருந்தது நேற்று தான் உறுதி செய்யப்பட்டது.
மற்றொரு நபர் ரூபேஷ் சோன்ட்கர். 24 வயதான இவர் கோத்ருட் ஸ்ரீவத்நகரை சேர்ந்தவர். இவர் கடந்த 13ம் தேதி சஷூன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானார்.
இதையடுத்து புனேவில் மட்டும் இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் ஆந்திராவின் ஹைதராபாத் உப்பல் பகுதியில் வசித்த சங்கர் (27) காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்தியாவில் இதுவரை 241 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இந்த காய்ச்சல் 253 பேருக்கு பரவியுள்ளது. இதுவரை 34 ஆயிரத்து 376 பேருக்கு பன்றி காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களில் 7 ஆயிரத்து 925 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.