புதுச்சேரி காங். வேட்பாளராக கண்ணன் போட்டி
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் சபாநாயகர் கண்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ்க்கு 13 எம்எல்ஏக்கள், திமுகவுக்கு 7 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதால் அவர் வெற்றி பெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
இந்த முடிவை நேற்று சோனியாவுடனான சந்திப்புக்கு பின்னர் டெல்லியில் இருந்து தொலைபேசி மூலம் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏவி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
அவருடன் முதல்வர் வைத்தியலிங்கம், கண்ணன் ஆகியோரும் சென்று சோனியாவை சந்தித்தனர். கண்ணன் வரும் 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
முன்னதாக புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நாராயணசாமி நாடாளுமன்ற தேர்தலில் வென்றதை அடுத்து அப்பதவி காலியாக இருந்தது. தற்போது அதற்கு வரும் அக்டோபர் 3ம் தேதி தேர்தல் நடக்கிறது.
1970ல் காங்கிரஸ் மாணவர் இயக்கத்தில் சேர்ந்த கண்ணன் 1985க்கு சட்டசபை தேர்தலுக்கு தேர்வு செய்யப்பட்டார். 1991ல் சுகாதார துறை அமைச்சராகவும், 1996-99 வரை புதுச்சேரி உள்துறை அமைச்சராகவும் இருந்தவர்.
கடந்த 2005ல் தனது புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்த அவர் இதுவரை மூன்று முறை காங்கிரஸிலிருந்து வெளியேறி பின்னர் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.