தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்
ஈத் உல் பிதர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்கள் ஒரு மாத கால ரமதான் மாத நோண்பை முடித்து இன்று ரம்ஜானைக் கொண்டாடினர்.
நாடு முழுவதும் காலையில் சிறப்பு ரம்ஜான் தொழுகை நிகழ்ச்சிகள் நடந்தன.
டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் லட்சக்கணக்கான முஸ்லீம்கள் கூடி தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
புத்தாடை அணிந்தும், இனிப்புகளைப் பரிமாறியும் பண்டிகையை கொண்டாடினர்.
தமிழகத்தில்...
தமிழத்திலும் ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சென்னை தீவுத் திடலில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்ட தொழுகை நிகழ்ச்சி நடந்தது. மெரீனா கடற்கரையிலும் சிறப்புத் தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளிலும் நடந்த தொழுகைகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
நெல்லை, தூத்துக்குடியில் கோலாகலம்
இதற்கிடையே, நெல்லை மாவட்டத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று வானில் பிறை தெரிந்ததை ஓட்டி இன்று காலை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி இருமாவட்ட பள்ளிவாசல்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இன்று காலை பள்ளிவாசல்களிலும், தனி திடலிலும் முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி கொண்டனர்.
மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த சிறப்பு தொழுகைக்கு வாவர் ஜூம்மா பள்ளி செயலாளர் விடிஎஸ் அப்துல் அமீது தலைமை வகித்தார். இமாம் ஹைதர் அலி குத்பாஓதி தொழுகை நடத்தினார். அமைச்சர் டிபிஎம் மைதீ்ன்கான், செய்யது மைதீன், எம்எம் கரீம், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தவ்ஹீத் ஜமாத் சார்பில் மேலப்பாளையம் ஈத்கா திடலில் மேலாண்மை குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி தொழுகை நடத்தினார்.
அவர் கூறுகையில் ஆட்சியாளர்கள் மக்கள் வரிப்பணத்தில் தங்களுக்கு தாங்களே சிலை வைப்பது தவறு. தர்மம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ரம்ஜான் பெருமாள் கொண்டாடப்படுகிறது என்றார்.
தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகம் முழுவதும் ரூ.1 கோடிக்கு பித்ரா எனப்படும் தர்மம் வழங்கப்பட்டுள்ளது. மேலப்பாளையத்தில் மட்டும் 2 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் அரிசி, பருப்பு, நெய், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவ உதவி, ரத்த தானம் உள்ளிட்ட சமூக சேவைகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.