'மாட்டு தொழுவம்': சோனியாவிடம் தரூர் விளக்கம்
டெல்லி: எகானமி வகுப்பை மாட்டுத் தொழுவ வகுப்பு என்று பேசி சர்ச்சையில் சிக்கிய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து விளக்கம் அளித்தார்.
மாட்டுத் தொழுவ கருத்துக்காக தரூரின் பதவியைப் பறிக்க வேண்டும் என காங்கிரஸில் கருத்து எழுந்துள்ளது. சசி தரூரின் பேச்சால் வெகுண்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சோனியாவை சமீபத்தில் சந்தித்து தரூரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோபமாக வலியுறுத்தினார்.
இந்த நிலையில், லைபீரியா சென்றிருந்த சசி தரூர், அங்கிருந்து ட்விட்டர் மூலம் மன்னிப்பு கேட்டது மேலும் சர்ச்சையை வலுப்படுத்தவே உதவியது.
இந்த நிலையில் இன்று காலை டெல்லி திரும்பிய தரூர் முதல் வேலையாக சோனியாவை சந்தித்துப் பேசினார். 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது மாட்டுத் தொழுவ கருத்து குறித்து அவர் விளக்கியதாக தெரிகிறது.
சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியில் வந்த அவர் குழுமியிருந்த செய்தியாளர்களைச் சந்திக்காமல் விருட்டென கிளம்பிச் சென்று விட்டார்.
சசி தரூர் பேசியது ஒரு ஜோக் என முன்பு பிரதமர் வர்ணித்திருந்தார். சோனியாவை சந்தித்தது போல பிரதமரையும் இன்று தரூர் சந்திப்பார் எனத் தெரிகிறது.